ஐபிஎல் டிவிஸ்ட் – நேரலையில் கோபத்தில் வெளியேறிய இர்பான் பதான்!

Share this News:

மும்பை (03 ஏப் 2022): ஐபிஎல் 15ஆவது சீசன் புதுபுது ட்விஸ்ட்களை கொடுத்து வரும் நிலையில், நேரலையில் ரெய்னாவுடன் கோபித்துக்கொண்டு இர்பான் பதான் வெளியேறிய வீடியோ ஒன்றி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 15ஆவது சீசனில் சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் விளையாடவில்லை. எனினும் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரெய்னாவை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஹிந்தியில் வர்ணனை செய்து வருகிறார். மேலும் போட்டி முடிந்தப் பிறகு போட்டியில் நடந்த விஷயங்கள் குறித்தும் அவ்வபோது பேசி வருகிறார். இந்நிலையில் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் விளையாடியது குறித்து இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் போட்டி முடிந்த பிறகு பேசினர்.

அப்போது இர்பான் பதான், பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து பேசியபோது, திடீரென்று குறிக்கிட்ட ரெய்னா, பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் பிரித்தி ஜிந்தா குறித்து பேச ஆரம்பித்தார். இதனால், அதிருப்தியடைந்த இர்பான் பதான் உடனே நேரலையில் இருந்து வெளியேறி, ஒரு இருக்கையில் அமர்ந்தார். அந்த சம்பவத்தால் பதறிப்போன ரெய்னா உடனே இர்பானிடம் சென்று மன்னிப்பு கோரினார். இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இர்பான் பதான் திடீரென்று ஏப்ரல் ஃபூல் எனக் கூறி சிரிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, வர்ணனையாளர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரெய்னா ரசிகர்கள் இதனைப் பகிர்ந்து ‘சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே ஏப்ரல் ஃபூல் செய்துவிட்டது, நீங்கள் லேட் இர்பான்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply