சென்னை (03 மார்ச் 2022): சென்னை மேயராக 28 வயது பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றிப்பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களில், ரிப்பன் மாளிகையை ஆளப் போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதென்ற எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில், திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 28 வயதான பிரியா ராஜன் எம்.காம் முதுநிலை பட்டதாரி. பிரியா மறைந்த திமுக எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார்
மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நாளை (மார்ச் 4) மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி மேயர், துணை மேயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சி மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ் குமாரும் தேர்வாகியுள்ளனர்.
சென்னை மேயர் பதவியானது, பட்டியலின பெண்ணுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.