சென்னை (05 ஜன 2022): தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக விசிக வெளிநடப்பு செய்தது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக்கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும், சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. தன் உரையை தொடங்கிய ஆளுநர், கொரோனா இரண்டாவது அலையை சமாளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
மேலும், ”மெகா முகாம்கள் நடத்தி அதன்மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது”என்று தெரிவித்தார்.
இதனிடையே, நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விசிகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.