சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Share this News:

சென்னை (24 ஜூன் 2021): தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் பல ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார்.

அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கணக்காய்வு அறிக்கை (CAG) இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில், “அதிமுக ஆட்சியில் 2013ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டான்ஜெட்கோவுக்கு (TANGEDCO) கூடுதல் செலவாக ரூ 2,381.54 கோடி ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.2,099.48 கோடி ஏற்பட்டுள்ளது.

தகுதி அடிப்படையில் கடை நிலையில் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் பெற வேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூ 349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்புக் கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்த தொகை ரூ.122.8 கோடியாக உள்ளது. மின் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காதால் ஏற்பட்ட நஷ்டம் ரூ 39.48 கோடியாகும்.

வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ.1,055.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தபடி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ.712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூ 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவுக்கு ரூ.605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ.93.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2015-2018ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு நஷ்டம் ரூ 544.44 கோடியாகும். சந்தை விலையில் ரூ 5.42, ரூ 3.39 க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ.12 க்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. ரூ.3 மின்சாரத்தை ரூ.5.50 க்கு முறைகேடாக வாங்கியதில் ரூ.1687 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply