செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Share this News:

சென்னை (05 நவ 2022): வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.03 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக வினாடிக்கு 400 கன அடி நீர்வரத்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து 3 வது நாளாக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2862 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 100 கனஅடி உபரி நீரானது திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணியளவில் 500 கன அடியாக உயர்த்தப்பட்டு உபரி நீரானது திறக்கப்படவுள்ளது.

தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதால் குன்றத்தூர், வலுதலம்பேடு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


Share this News:

Leave a Reply