சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லா மரணங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், அரசு மருத்துவமனையிலிருந்து 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் வருத்தம் தரும் வகையில் உள்ளன. அதாவது, கொரோனா அறிகுறி இல்லாதவர்களின் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளதுதான் சற்றே அச்சமூட்டும் வகையில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தற்போது நாள் தோறும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று வரை 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.