சாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Share this News:

கும்பகோணம்: மேலக்காவேரி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலக்காவேரி காவிரி ஆற்றுப்பாலம், கடை வீதி மற்றும் நகர சாலைகளில் பல இடங்களிலும் காலையிலிருந்து மாலை வரை கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு நேரிடுவதுடன், விபத்தும் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக மேலக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் சாலைகளில் திரியும் கால்நடைகளை கடந்து செல்லும்போது அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது.

மேலும் ஆங்காங்கே சாணங்களை போட்டு விடுவதால் துர்நாற்றம் வீசகிறது. ஆகவே கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கால்நடை வைத்திருப்போர் அவற்றுக்கு நகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ கால்நடை களைத் திரியவிடக் கூடாது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெருக்களில் திரியும் மாடுகளை பிடித்து பவுண்டில் அடைத்து வைத்து மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது வழக்கம். தற்போது அதுபோல் செய்யாமல் விடுவதால் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை பால் கறக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் தெருக்களில் சுற்ற விடுகின்றனர், ஆகவே கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அடைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.


Share this News:

Leave a Reply