திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் காலமானார்!

Share this News:

சென்னை (10 ஜுன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 2ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

தொடக்கத்தில் உடல்நிலை சீராக இல்லையென்றாலும் சற்று முன்னேற்றமடந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் மீண்டும் ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 8.05 மணியளவில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனளிக்காமல் ஜெ.அன்பழகனின் உயிர் பிரிந்திருக்கிறது.

62 வயதான ஜெ.அன்பழகன் தி.மு.க. சார்பில் 3 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். தென் சென்னை மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தவர்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி கழகத்திற்காக ஜெ.அன்பழகன் உழைத்தவர். அதிமுக அரசின் அவலங்களை சட்டப்பேரவையிலும், மக்கள் மேடைகளிலும் துணிச்சலும் சுட்டிக்காட்டியவர். இப்படி இருக்கையில், அவரது மறைவு தி.மு.கழகத்தினரிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this News: