கதறி, கண்ணீர் விட்ட துரைமுருகன் – அப்படி என்ன சொல்லிவிட்டார்,ஸ்டாலின்?

Share this News:

சென்னை (09 செப் 2020): திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் மகிழ்ச்சி அடைவார். துரைமுருகன், டி.ஆர்.பாலுவை பார்க்கும்போது கலைஞரின் முகம் தான் எனக்குத் தெரிகிறது. அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்தப் பதவி துரைமுருகனுக்கு வந்துள்ளது. துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் தி.மு.க.வில் படிப்படியாக உயர்ந்து இந்நிலையை அடைந்துள்ளனர்.

ஒன்பது முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்.சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன்.” என்று பேசினார்.

அப்போது ஸ்டாலின் தன்னை புகழ்ந்து பேசியதைக் கேட்டு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.

மேலும் டி.ஆர்.பாலு குறித்து பேசிய ஸ்டாலின், “மிசா காலத்தின்போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு. ‘வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவர்’ என கருணாநிதியால் பாராட்டப்பெற்றவர் பாலு. கலைஞருக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய தி.மு.க.வின் போர்வாள் டி.ஆர்.பாலு. டி.ஆர்.பாலு ஆறு முறை மக்களவை எம்.பி, மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்தவர்.” என்றார்.

மேலும், ஆ.ராசாவும், பொன்முடியும் தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். ஆ.ராசா ஐந்து முறை எம்.பி., பொன்முடி ஐந்து முறை எம்.எல்.ஏ. என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களானது மிகுந்த மகிழ்ச்சி.

ஆ.ராசா, பொன்முடி தங்களது அறிவை, திறமையை தி.மு.க. வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். ‘தகத்தகாய சூரியன்’ என ஆ.ராசாவை பாராட்டியுள்ளார் கலைஞர். செப்டம்பர் 15- ஆம் தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழாவும் இதேபோல் எளிமையாகவே நடைபெறும். சட்டமன்ற தேர்தலுக்காக முழுமையாக உழைக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் பேசினார்.


Share this News:

Leave a Reply