வேலூர் (26 மார்ச் 2022): வேலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த துரை வர்மா (49) மற்றும் அவரது மகள் ப்ரீத்தி (13) இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த மற்றொரு வாகனமும் தீ பிடித்துள்ளது.
இதனை அடுத்து வீட்டினுள் இருந்த தந்தை மகள் இருவரும் வெளியில் வரமுடியாத அளவில் புகைமூட்டம் இருந்துள்ளது. இதில் மூச்சு திணறிய இருவரும் வீட்டுக்குள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அடுத்த நாள் காலை பக்கத்து வீட்டினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.