சென்னை (10 பிப் 2022): சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது குறித்து, பா.ஜ.க. அலுவலகத்திலும், அதை சுற்றியுள்ள சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்துள்ள காவல்துறையினர், அவற்றை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் கூறியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.