கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

Share this News:

சென்னை (03 ஏப் 2023): கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்தார்.

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News: