சீமான் கட்சிக்குள் ஆர் எஸ் எஸ் – பகீர் கிளப்பும் சீமானின் நண்பர்!

Share this News:

சென்னை ,(19 அக் 2021):நாம் தமிழர் கட்சிக்குள் ஆர் எஸ் எஸ் நுழைந்துள்ளதாக இயக்குனரும் சீமானின் நெருங்கிய நண்பரான அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.பி.பி.நாடு ஊடகத்துக்கு இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் பாஜகவின் பி டீம் என்கின்றனர். யார்தான் யாருக்கு பி டீம் என்பது தெரியவில்லை. பொதுவாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் பெரியாரை நிராகரிக்கின்றனர்; திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவை டார்கெட் செய்கின்றனர். இந்த விஷயங்களை பாஜகவினரால் வெளிப்படையாக பேச முடியாது. ஏனெனில் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. ஆனால் இளைஞர்களை தம் பக்கம் ஈர்க்கும் பேச்சாற்றல் கொண்ட சீமான், இதே கருத்துகளைப் பேசுகிறார். இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்குதான் உதவும் என்று தெரிந்தேதான் சீமான் பேசுகிறார். அதனால்தான் 10 ஆண்டுகளாக சீமானை விமர்சிக்காமல் இருந்த வைகோ, கொளத்தூர் மணி முதல் இன்று திருமாவளவன் வரை, அவரது பாதை ஆபத்தானது, இந்துத்துவவாதிகளுக்கு உதவக் கூடியது என எச்சரிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஊருவல்

நாம் தமிழர் கட்சி என்ற போர்வையில் உறுப்பினராக இருந்து கொண்டு சமூக வெளியில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் செயல்பட்டும் வருகின்றனர். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால்தான் நான் பகிரங்கமாக பொதுவெளியில் இதனை தெரிவிக்கிறேன். இது தொடர்பாக சீமானிடம் பேசினால், என்னை பார்த்தா அப்படியா தெரியுது? தப்பா புரிஞ்சுகிட்டு பேசினா என்ன செய்யுறது என்றுதான் சொல்வார். சீமானின் பேச்சு ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை வளர்த்துவிடக் கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் சிறுபான்மையினரை சந்தேகக் கண்டு கொண்டு பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த கொள்கை ஆவணத்தை பொதுவெளியில் நாம் தமிழர் கட்சியினர் பேசுவார்களா? என்பது தெரியவில்லை. அப்படி கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து உருவாக்குகிற தமிழ்த் தேசியம் யாருக்கும் தேவையில்லை. இதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மை அஜெண்டா எனில் இது மனிதநேயத்துக்கு மாறானது. இதனை ஏற்கவே முடியாது. எதிர்க்கத்தான் வேண்டும்.

சீமானின் பேச்சில் இருந்தே எடுத்துக் கொண்டால் முதலில் தோன்றியது மதமா? மனிதனா? மனிதன்தான். அப்படியானால் மனிதன் தோன்றும் போதே சைவ மதமும் தோன்றிவிட்டதா? மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே அத்தனை மதங்களும் வந்தன. அப்படி இருக்கும் போது சைவத்துக்கு மட்டுமே உரிமை கொண்டாடுவேன் என சீமான் பேசுவது ஏற்புடையது அல்ல. கீழடியில் எந்த ஒரு மதத்துக்குமான ஆதாரம் எதுவும் இல்லை. எனது முப்பாட்டன்களிலேயே முருகன் மட்டும்தான் வணக்கத்துக்குரியவரா? முருகனுக்கு முன்னும் பின்னும் சிறப்பானவர்கள் என யாரும் இல்லையா?

இஸ்லாமியர் தமிழரே இல்லை என்று சர்ட்டிபிகேட் கொடுக்க இவர்கள் யார்? நான் என் மொழியை நேசிக்கிறேன்.. என் இனத்தை நேசிக்கிறேன். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை ஆராதிக்கிறேன்…. போற்றுகிறேன். அதற்கான நான் மற்றவர்களை சிறுமையாகப் பார்க்க வேண்டுமா? தாய் மதத்துக்கு திரும்புங்க என்று பேசுவது எல்லாம் அறிவீனம். பிற மதத்தில் இருந்து சீமான் சொல்வது போல தாய் மதம் திரும்பினால் சைவத்துக்கு மாற வேண்டுமா? மாலியம்- வைணவத்துக்கு மாற வேண்டுமா? என்பது நியாயமான ஒரு கேள்விதான். இந்துத்துவவாதிகள் கர்வாப்ஸ் என்று சொன்னபோதே இந்த கேள்வியை நாம் முன்வித்தோம். ஆர்.எஸ்.எஸ்- நாம் தமிழர் இடையேயான ஒற்றுமைகள் பல இருப்பதை அவர்களே கூட மறுக்க முடியாது.

இவ்வாறு அமீர் கூறினார்.


Share this News:

Leave a Reply