மொபைலைக் கீழே வைக்க முடியவில்லை – பாராட்டுகள் குவிகின்றன: முதல்வர் ஸ்டாலின்!

Share this News:

சென்னை (11 டிச 2022): “மாண்டஸ் புயலை திறமையாகக் கையாண்டதாக, அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:-

“இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறீர்கள்.

புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்தபோது கொரோனா-வின் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் அல்ல. முதல்-அமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் சுகாதார அமைச்சர்களாக மாறினோம். அதனால், கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது.

கோவிட் பெருந்தொற்று முடிவதற்கு முன்பே வெள்ளம், பெரிய மழை வந்தது. அதனையும் சமாளித்து வெற்றி கொண்டோம். தற்போது புயல் வந்து சென்றுள்ளது. புயலையே சந்திக்கும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது. உழைப்பு… உழைப்பு… உழைப்பு தான் நமது மூலதனம் என கருணாநிதி கூறினார்.

நேற்று முதல் மொபைலை கீழே வைக்க முடியவில்லை. சிறப்பாக செயல்பட்டதாக அனைவரும் பாராட்டுகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன.

நம்பர் 1 முதல்-அமைச்சர் என்பதில் பெரிய பெருமையோ, பாராட்டாகவோ பார்க்கவில்லை. என்றைக்கு தமிழகம் நம்பர் 1 மாநிலம் என வருகிறதோ அன்றுதான் பெருமை. அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நிச்சயம் அதனை நிறைவேற்றுவேன்.

குடும்ப கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசும், மாநில அரசும் பல கோடி ரூபாய்களைச் செலவு செய்து பிரச்சாரம் செய்கின்றன.

முன்பு குடும்ப கட்டுப்பாடு என்ற நிலை ”நாம் இருவர், நமக்கு மூவர்” என்று இருந்தது. பின்பு அது ”நாம் இருவர், நமக்கு இருவர்” என மாறியது.

தற்போது ”நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்று மாறி உள்ளது. நாளை இதுவே ”நாமே இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்?” என மாறினாலும் ஆச்சர்யமில்லை. ”நாமே குழந்தைகள், நமக்கு ஏன் குழந்தை?” என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. நாட்டின் மக்கள் தொகை பெருக்க நிலை அப்படி உள்ளது.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து என்ற பெருமை பெற்று தந்தவர் கருணாநிதி.”

இவ்வாறு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.


Share this News:

Leave a Reply