பெண்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

Share this News:

சென்னை (24 அக் 2020): பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனிக்கிழமை (இன்று) மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பியபடி 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில் தான் பேசியதை வேண்டுமென்றே சிலர் துண்டித்து வெளியிட்டிருப்பதாகவும், பெண்களை இழிவுபடுத்துகிறோம் என்று வேண்டுமென்றே சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

தனது 40 நிமிட உரையை பெண்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த ஆர்ப்பாட்டம் தன் மீதான பழியை துடைப்பதற்கானது இல்லையென்றும், பெண்கள் மீதான இழிவை துடைக்கும் போராட்டம் இது என்றும் தெரிவித்தார். மனுதர்ம சாஸ்திரத்தை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோர் ஏற்கனவே பொது வெளியில் வைத்து எரித்துள்ளதாகவும், இன்று அவர்கள் வழியில் மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், தான் எந்த அவதூறு கருத்துக்களையும் பேசவில்லை என்பதை திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply