கலவரக் களமான வெள்ளை மாளிகை – டிரம்புக்கு எதிராக பேஸ்புக் ட்வீட்டர் நடவடிக்கை!

Share this News:

வாஷிங்டன் (07 ஜன 2021): அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் நாடாளுமன்றத்தில் நடந்து வருகின்றன. இதற்காக உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள் என பதிவிட்டார்.

தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது நேற்று மதியம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்புடன் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில், டிரம்பின் 3 டுவிட்டர் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குடிமக்கள் ஒற்றுமை அல்லது வன்முறை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்புடைய டுவிட்டரின் கொள்கை விதிகளை மீறும் வகையிலான செயல்கள் வருங்காலத்தில் நடைபெற்றால், டொனால்டு டிரம்பின் கணக்கு நிரந்தரம் ஆக முடக்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனமும் டிரம்பின் கணக்கை 24 மணிநேரம் முடக்கம் செய்துள்ளது.

இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொஸ்சேரி கூறும்பொழுது, அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எங்களுடைய நிறுவனத்தின் 2 கொள்கை விதிகளை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதனால், அந்த கணக்கு 24 மணிநேரம் முடக்கப்படுகிறது. அந்த நேரத்தில், சமூக பக்கத்தில் அவரால் பதிவு எதுவும் பதிவுகளை வெளியிட முடியாது என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சம்பவம் பற்றி போலீசார் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கதவை உடைத்து அத்துமீறி நுழைய முயன்றனர். அந்த கும்பல் மீது நடத்தப்பட்ட போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மருத்துவ சிகிச்சையில் பலனின்றி 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, கலகத்துடன் தொடர்புடைய 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply