சென்னை (12 ஜூன் 2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த பீலா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மறுபடியும், ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். வருவாய் நிர்வாகத்தில் கமிஷனராக உள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவர் தற்போது வகிக்கும் பதவியையும் கூடுதலாக வகிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் இந்த மாற்றம் நடைபெற்றதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் பீலா ராஜேஷ் கொரோனா தொற்று குறித்த தினசரி அறிக்கையில் தப்லீக் ஜமாத்தினரை குறிப்பிட்டு கூறியது பலரை முகம் சுழிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.