இலங்கை அரசுக்கு எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி கடிதம்!

Share this News:

சென்னை (14 மே 2020): கொரோனாவால் உயிரிழந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எஸ்.டி.பி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இலங்கை அரசுக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு இமெயில் மூலம் விடுத்துள்ள மனுவில் கூறியதாவது:

கொரோனா வைரஸ் காரணமாக பரவிவரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 மிகப்பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய பகுதிகளில் கோவிட்-19 ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவின் பெயரால் இலங்கையில் மதவாதம் அதிகரித்துள்ளது என்றும், குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பை மதவாத அமைப்புகள் அதிகளவில் தூண்டிவருகின்றன என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

மேலும், இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை அடக்கம் செய்யாமல், உடலை அரசே எரித்து விடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்றதொரு நடைமுறை இல்லாதபோது, இலங்கையில் மட்டும் நடைபெறும் இத்தகைய நிகழ்வு காரணமாக, இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் குளிப்பாட்டுவது, உடலை துணியால் போர்த்துவது, ஜனாஸா எனும் இறுதி தொழுகை நடத்துவது, அடக்கம் செய்வது என்பது கட்டாய கடமையாகும் என்கிறபோது, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை எரியூட்டுவது என்பது மத உரிமைகளை மறுக்கும் அதேவேளையில் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும்.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம் தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

இத்தகைய நெருக்கடியை நீக்க வலியுறுத்தி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அரசியல் காரணங்களுக்காக கோரிக்கையை செவிமடுக்க முன்வரவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இறந்த உடலில் இருந்து வைரஸ் வெளியேறி நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்ற இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கும் உயிரியல் காரணங்கள் தவறானவை என சர்வதேச அளவிலான மருத்துவர்களின், உயிரியல் வல்லுநர்களின் கூற்றுக்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் மரணித்தவர்களின் உடல்கள் அதிகளவில் மண்ணில் தான் அடக்கம் செய்யப்படுகின்றன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் அவ்வாறே அடக்கம் செய்யப்படுகின்றன. எங்கும் எரியூட்டப்படுவதில்லை.

ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும், உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் இமெயில் மூலம் தெரிவித்தார்.


Share this News: