திருச்சியில் பரபரப்பு – கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை வீசி எறிந்த மருத்துவ ஊழியர்கள்!

Share this News:

திருச்சியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை வேனில் ஏற்றிசென்று கோட்டைமேடு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 433 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 228 பேருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி சமயபுரத்தை அடுத்த தனியார் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான வேனில் ஏற்றிச் சென்று, அருகிலுள்ள கோட்டைமேடு என்ற பகுதியில், 3 ஊழியர்கள் சேர்ந்து தூக்கி வீசியுள்ளனர்.

தற்போது, இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி, அதில் ஈடுபட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: