மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் கொரோனா காலத்தில் விசா நடைமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தப்லீக் ஜமாத்தினர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவர்கள் யாரும் கொரோனாவை பரப்பியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறினார். மேலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 70 நாடகள் அனுபவித்த சிறைவாசமே போதுமானது என்றும், அவர்கள் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளனர். எனவே அவர்களை நாடுகளுக்கு திருப்பி அனுப்ப மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.