அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? – திருமாவளவன் கடும் கண்டனம்

சென்னை (23 மே 2020): திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி கைது செய்யப் பட்டிருப்பதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழக அரசு கைது செய்திருக்கிறது.

தலித் மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப் போலவும், தலித் மக்களை யார் சீண்டினாலும் இழிவு படுத்தினாலும் வேடிக்கைப் பார்க்க மாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும், அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைதுசெய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அதிமுக அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா?

கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிராக சாதிக் கொடுமைகள் நடந்துவிடக் கூடாதென கண்ணும் கருத்துமாய் செயல் படுவதால்தான், ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழக அரசின் கடமையுணர்வை நினைவுகூர்வது நம் கடமையல்லவா?

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப் படுத்தியுள்ளன.

கொரோனா மற்றும் முழுஅடைப்பு நெருக்கடி உள்ள இந்தச் சூழலிலும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறி இருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய சீராய்வு கூட்டம் கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்குத் தலித் மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலும் அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.

அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு தலித் மக்களுக்கான ‘தேசிய ஆணையம்’ ஏதேனும் முனைப்பு காட்டியதுண்டா?

குறிப்பாக, ஆணவக் கொலைகளைத் தடுக்க அந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதற்கென ஒரு சட்டம் வேண்டுமென கோருகிறோமே, அதனை பாஜக அரசு என்றைக்காவது பொருட்படுத்தியதுண்டா?

ஆனால், திமுக கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித் மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா? தேசிய ஆணையத்தையும் இதற்காக பாஜக அரசு பயன்படுத்துவது நியாயமா?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், திமுகவையும், அதிமுகவையும் பலவீனப்படுத்தாமல் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும்.

அதிமுகவை முழுமையாகத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப் படைக்கும் பாஜக, திமுகவைப் பலவீனப் படுத்துவதையே முதன்மையான செயல்திட்டமாக வரையறுத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாஜக-வாக இருந்தாலும் சரி; அதிமுக வாக இருந்தாலும் சரி; அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும். உள்நோக்கம் கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கருவியாக்குவதும், தலித்மக்களைப் பலிகடா ஆக்குவதும் ஏற்புடையதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ். பாரதி அவர்கள் அதிமுக அரசுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்தி வருவதால் அவரைப் பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு மேலோங்கி இருப்பதாலும், தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் சாதிஅரசியல் விளையாட்டுக்கு இணங்கிப் போக வேண்டிய இயலாமைக்கு ஆளாகியிருப்பதாலும் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் இப் போக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

பாஜக-அதிமுக நடத்தும் சாதி அரசியலையும், சாதி- மதவெறி சக்திகளின் கூட்டுச்சதியையும் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...