புதுடெல்லி (16 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இஸ்லாத்தில் ஹிஜாப் அவசியமான ஒன்று அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்ஜ் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, மாணவிகள் பரீட்சைக்கு வர வேண்டியிருப்பதால் இந்த விசயத்தில் அவசரம் இருப்பதாகக் கூறினார்.
மேலும் ஏற்கனவே நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர், ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிடும் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ஹெட்ஜ் தெரிவித்தார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தை விசாரணைக்கு வைப்பதாகக் கூறியது. அதேவேளை இதனை விசாரிக்க கால அவகாசம் தேவை என்பதால் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. மேலும் ஹோலி விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் இதனை பட்டியலிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.