பள்ளிகளில் குழந்தைகளுடன் அமர பெற்றோருக்கும் அனுமதி!

Share this News:

திருச்சி(09 அக் 2021) : ”ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன், வகுப்பறையில் பெற்றோர் அமர அனுமதி அளிக்கப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று முன்தினம் இரவு, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மகேஷ் தெரிவிக்கையில், “நவம்பர்1 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ – மாணவியரின் பெற்றோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, கூடுதல் கவனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் முறையாக ஒன்றாம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு எப்படி முக கவசம் அணிவது என்பது கூட தெரியாமல் இருக்கும். ஆகவே, தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவர்களின் பெற்றோர், தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து, அவர்களுடன் வகுப்பறையில் இருக்கலாம். குழந்தைகளால், முக கவசம் அணிந்து நீண்ட நேரம் இருக்க முடியாது என்ற நிலை வரும்போது, தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்.

உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை விட பெரிய பிரச்னை, குழந்தைகளின் மனநிலை தான் என கூறி உள்ளது. அதை மையப்படுத்தியே பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.” இவ்வாறு, அவர் கூறினார்


Share this News:

Leave a Reply