காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸுக்கு தமிழக அரசு புதிய பதவி!

Share this News:

சென்னை (29 ஜூன் 2021): தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாளன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு மீண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 2010ன்படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருத்தி அமைத்து அதன் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கடந்த 1989 மற்றும் 1991 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் இருந்தும், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஆவார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply