நான் குறைகுடமல்ல நிறைகுடம் – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி பதில்!

Share this News:

சென்னை (30 மே 2021): ஜிஎஸ்டி குறித்த கோவா பாஜக அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குறைகுடம்தான் கூத்தாடும். நான் குறைகுடமல்ல, தமிழகத்தின் நிதி அமைச்சராக நான் என் மாநிலத்தில் பல பொறுப்புகளை கவனித்து வருகிறேன். 8 கோடி மக்கள் வசிக்கும் மாநிலத்தில் மக்களுக்காக நான் பல பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறேன், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். எனவே பொதுவாக தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்.

ஆனால் இப்போது கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும், நான் கோவா மக்களை அவமானப்படுத்தியாக வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். அதோடு இது போன்ற நபர்களால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வைத்தேன், முதல் விஷயம், ஒரு மாநிலம் = ஒரு வாக்கு என்ற ஜிஎஸ்டி மாடல் தவறு. அதை கைவிட்டுவிட்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வாக்குகளை கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து கவுன்சில் தொடங்கி நாடாளுமன்றம் வரை மக்கள் தொகை அடிப்படையிலேயே பிரநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அதேபோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

அதோடு சுய மரியாதை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில், மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பேசினேன். திராவிட கொள்கையான அதிகார பரவல் குறித்து, சுயாட்சி குறித்தும், ஒன்றியத்தில் இருந்து உரிமைகளை பரவலாக்கி மாநிலங்களின் அனைத்து மூலைக்கும் கொண்டு செல்வது குறித்து பேசினேன். நான் மீட்டிங்கில் பேசிய அனைத்து விஷயங்களும் இந்த இரண்டு தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து அமைந்து இருந்தன.

அதேபோல் கொரோனா தடுப்பு பணிக்காக ஸ்பெஷல் செஸ் வரி என்ற சிக்கிம் போன்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவே பேசினேன். செஸ் வரி வசூல் தொடர்பாக கோவா அஜெண்டா எதையும் முன் வைக்காத போது, நான் எப்படி கோவாவிற்கு எதிராக வாக்களிக்க முடியும்? செஸ் வரி வசூல் குறித்து கோவா எந்த அஜெண்டாவையும் விவாதிக்காத போது எப்படி அதில் நான் வாக்களிக்க முடியும்?.

இதனால்தான் கோவா அமைச்சரின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது . அதோடு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறேன், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா மருந்து பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். மனித நேய அடிப்படையில் வரியை குறைக்க வேண்டும் என்ற போது அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் வாக்களித்தார்.

அதேபோல் அவர் இந்த மீட்டிங்கில் மீண்டும் மீண்டும் சொன்ன விஷயத்தையே திருப்பி பேசினார். அவரின் பேச்சு வெறுமையாக இருந்தது மற்றவர்களை குறுக்கிடும் விதமாக இருந்தது. 20 கோடி மக்கள் தொகை உள்ள உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கோவா அமைச்சர் பேசினார். இது இந்திய ஜனநாயகத்திற்கு சரியானதா என்று மக்களே முடிவு செய்யட்டும்.

நான் கோவா மக்களிடம் எந்த பொழுதிலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் அவர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அதே சமயம் உங்களின் மாநில உரிமைக்காக நான்தான் பேசினேன். அவர்களின் உரிமைக்காகவே பேசினேன். அதற்கான நன்றியை நான் எதிர்பார்க்கவில்லை. . மாநில உரிமைகளை நிலைநாட்டுவதுதான் என் குறிக்கோள். அதே சமயம் கோவா மக்களுக்கு என் அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்த முந்தைய டிவிட்டில் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ பொய் கூறியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply