தில்லி (17 ஜூலை 2020):இன்று வெள்ளிக்கிழமை, இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்ப்பட்டடோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டதாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக்கணக்கு தெரியப்படுத்துகின்றது.
கொரோனா பாதிப்பு ஆரம்பித்து, முதல் நான்கு மாதங்களில் அரை மில்லியன் அளவைத் தொட்டிருந்த இந்த பாதிப்பு, அடுத்த அரை மில்லியன் கணக்கைத் தொடுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் வெறும் மூன்றே வாரங்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெயிளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி 30 அன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தொற்று ஆரம்பித்து இன்று ஒரு மில்லியன் அளவை அடைந்தது வரை, நாடு எவ்வாறு இந்த கொரோனா தொற்றுப் பரவலுக்கு பதிலடி கொடுத்துள்ளது என்று பார்த்தால் கவலையே மிஞ்சுகின்றது.
இந்த காலகட்டத்தில் தேசிய அளவில் மூன்று ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், கொரோனா பாதிப்பு என்பது ஒரு சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும் தேசிய அளவில், கட்டுப்படுத்தப்பட்டதாக புள்ளி விவர வரைபடம் காட்டவில்லை என்பதே உண்மை.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் பத்து இலட்சம் பேரில் 8,991 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பரிசோதனை என்பதும், இது உலக அளவில் கொரோனா தொற்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே மிகக் குறைந்த அளவு எனும் மோசமான உண்மையும் வெளியாகியுள்ளது. இந்த அளவு, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் முறையே 1,32,993 மற்றும் 21,507 எனில் இந்த தொற்று அம்சம் இந்தியாவில் எவ்வளவு வீரியமுடன் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எனினும் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், கடந்த ஜூன் 15 முதல், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 63 சதவிதமாக உயர்ந்திருப்பதுதான்.