புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி அப்போது பேசும்போது, “உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது..
புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தேசத்தின் நன்மையை கருதி தவிர்த்திட வேண்டும்” என்று அவர் கூறினார்.
“காஷ்மீர் இன்று வளர்ச்சிக்கான புதிய பாதையில் பயணிக்கிறது. வடகிழக்கில் மீண்டும் அமைதியை கொண்டு வருவதில் ஆகட்டும், அல்லது அங்கே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகட்டும் ஒற்றுமைக்கான புதிய பரிமாணங்களை நாடு நிலைநாட்டியுள்ளது.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.