சென்னை (07 ஆகஸ்ட், 2020):ஆகஸ்ட் 10ஆம் தேதி, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக உயர்கல்வி தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் அதிபயங்கர கொடிய நோயாக உருவெடுத்திருக்கின்ற கொரோனா, அனைவரின் இயல்பு வாழ்கையையும் புரட்டி போட்டு விட்டது. பல்கலைகழகம், கல்லூரி, பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.ஆனால் தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு இறுதி தேர்வு ஆரம்பமாவதற்கு முன்பே கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து கல்வியாளர்கள் மேல்மட்ட குழு ஆலோசனைப்படி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது . மேலும் மாணவர்கள் பதிவு செய்திருந்த அலைபேசியில் குறுந்தகவல் வாயிலாகவும், tnresults.nic.in மற்றும் dg1.tn.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் மதிப்பெண்களில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால், மாணவர்கள் பயின்ற பள்ளியில் தலைமையாசிரியர் வாயிலாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.