நியூசிலாந்து (13 டிச 2021): நியூசிலாந்தில் ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதே நேரத்தில், புதிய மாறுபாடான ஒமிக்ரானுக்கு எதிராக பாதுகாக்கும் நோக்கில், சில நாடுகள் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளன.
ஒமிக்ரான் (Omicron) பீதிக்கு மத்தியில் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களைப் போட மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், நியூசிலாந்தில் ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸை ஒருவர் இவ்வளவு டோஸ் எடுத்துக்கொண்ட முதல் நபர் இவராக இருக்கலாம். அதில், அந்த நபர் 10 டோஸ் தடுப்பூசியை வெறும் 24 மணி நேரத்திற்குள் போட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
DW.com தளத்தில் வெளியான அறிக்கையில், கோவிட் -19 தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு திட்டத்தின் குழு மேலாளர் ஆஸ்ட்ரிட் கோர்னிஃப், ‘இது குறித்து அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது, நாங்கள் இந்த விசயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் பல தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், உடனே தெரிவிக்கவும்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.